முகப்பு
தமிழ்நாடு

 காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கலந்துரையால் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கலந்துரையால் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 "நலிவுற்றோர் நலன் கருத்தரங்கம்' என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்ற திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெற்றது.
 பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடிக்கும் மேலாக அவரவர் வங்கிக் கணக்குகளில் வழங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் காணொலிக் காட்சி மூலம் பேசினார். முத்ரா கடன்கள் வழங்கியது, ஒரே நாடு- ஒரே ரேஷன் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அந்தந்த திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடினார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மத்திய அரசின் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகள், அரசுத் துறை அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 திருவள்ளூர்...: பிரதமர் காணொலி நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கூட்டரங்கில் இருந்து மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள், பயனாளிகள் பங்கேற்றனர். முன்னதாக, ஊரக வளர்ச்சி, வருவாய், நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
 இதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், போஷன் அபியான் திட்டம், மாத்ரு வர்தனா திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், ஸ்வநிதி திட்டம், கரிப் கல்யாண் யோஜனா திட்டம், முத்ரா யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
 நிகழ்வில் மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், இணை இயக்குநர் (சுகாதாரம்- ஊரக நலப் பணிகள்) இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எபினேசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ஜவாஹர்லால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 செங்கல்பட்டு...: இதேபோல, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் ராகுல் நாத், பயனாளிகள், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
 உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி, செங்கல்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →