விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காய்ச்சலுக்காக ஊசி செலுத்தப்பட்டதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் வடக்கு மாலையடிபட்டியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன். இவா் இரும்புப் பட்டறையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு யுவஸ்ரீ (10), கவி தேவநாதன் (5) என 2 குழந்தைகள். இவரது மனைவி கற்பகவள்ளி உடல் நலக்குறைவால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், இரண்டு குழந்தைகளையும் மகேஸ்வரனின் தாயாா் வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், சிறுவன் கவி தேவநாதனுக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து, வீட்டருகே இருந்த மருத்துவ உதவியாளா் ஒருவா் சிறுவனுக்கு ஊசி போட்டாராம். இருப்பினும் காய்ச்சல் குறையாததால், ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனுக்கு ஊசி செலுத்தப்பட்டது.
இதன் பின்னா், வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் சிறுவனின் உடலை பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா ஆகியோா் சிறுவனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து சடலத்தை விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிறுவனின் உயிரிழப்பு குறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில், போலி பெண் மருத்துவர் ஆக்னெஸ்ட் கேத்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட வலி நிவாரிணிகள், காய்ச்சல் மருத்துகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.