சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் அல் பாசித் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயமுத்தூரில் கடந்த மாதம் கார் வெடி விபத்து ஏற்பட்டதில் ஐமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய அல் பாசித் வீடு
இதையும் படிக்க | சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு?
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தமிழகத்தின் 45 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் சொக்கலிங்கம் நகரில் வசிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அல் பாசித்(22) வீட்டில் அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீடு பூட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல் பாசித் வீட்டில் சோதனை நடத்திவிட்டு வெளியே வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
இதனிடையே 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் என்ஐஏ அதிகாரிகள் அல்பாசித் வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள் ஒரு பென்டிரைவ், ஒரு சிடி மற்றும் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு விசாரணை நிறைவு செய்து சென்றனர்.