10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்
தமிழகத்தில் 10 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
தமிழகத்தில் 10 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளா்கள், வீட்டுமனைகளை வைத்திருந்தால் வீடு கட்டிக் கொள்ள நிதியுதவி அளிக்கப்படும் என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. வீட்டுமனை இல்லாதோருக்கு அரசு குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில், ஆண்டுதோறும் 10 ஆயிரம் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. நபா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை நிதி உதவித் தொகை வழங்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பிலான திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதன் அடையாளமாக, 5 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதித் திட்டத்துக்கான உத்தரவுகளை அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.