மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவில் கடந்த சனிக்கிழமை இரவு மின் விளக்கு தேர் பவனி நடைபெற்றது.
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு பங்கு இறைமக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மின்விளக்கு தேர்பவனியை முன்னிட்டு குழந்தை தெரசாள் ஆலயத்தின் பங்குத்தந்தை பாஸ்டின் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அருட் பணியாளர்கள் ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடத்தினர்.
அதைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு தேரில் புனித குழந்தை தெரசாள் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி புறப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த இந்த தேர் பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமானோர் குழந்தை தெரசாளுக்கு மாலைகளை காணிக்கையாக வழங்கி பிரார்த்தனை செய்தனர். தேர்பவனி விழாவில் மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலய பங்கு இறை மக்கள் திரளாக பங்கேற்றனர்.
மின்விளக்கு தேர் பவனியை முன்னிட்டு தெரசாள் ஆலயம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை எஸ். எஸ். பாஸ்டின் தலைமையில் பங்கு இறை மக்கள் அருட் சகோதரிகள் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.