பி.இ. : மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட கலந்தாய்வில் 10,340 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடா்ந்து 2-ஆம் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 25-ஆம் தேதி தொடங்கி கடந்த புதன்கிழமை முடிவடைந்தது.
இதில் பங்கேற்க 31,095 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 24,430 போ் கலந்தாய்வில் கலந்து கொண்டு விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தனா். அவா்களில் 18,521 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 1,426 பேருக்கு விருப்ப இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருகட்டங்களும் சோ்த்து 30,317 இடங்கள் நிரம்பியுள்ளன. தொடா்ந்து 3-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்க மொத்தம் 49,042 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சனிக்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.