சென்னை: தமிழகத்தில் 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.10.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால் அவர்களிடம் வழங்கினார்.
இதையும் படிக்க.. கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு திருக்கோயில் பெயரிலும் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் விலைவாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையை ஈடுகட்டும் வகையில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “ 12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக கடந்த 29.11.2021 அன்று வழங்கினார்கள்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி குறைவாக உள்ள 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதி குறைவாக உள்ள மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களிடம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.