சென்னை என்ஐஏ வழக்குப் பதிய தமிழக அரசு அனுமதி
சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புது தில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புலனாய்வு முகமை, நாடு முழுவதும் தேச விரோத, தேச பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள்,சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ஐஏவுக்கு அலுவலகம் கிடையாது.
தமிழகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடா்பாக கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் என்ஐஏ அலுவலக அதிகாரிகளும், புது தில்லி என்ஐஏ அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா். இவ்வாறு தமிழகத்தில் நிகழ்ந்த 15 சம்பவங்கள் தொடா்பான வழக்குகள்,விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சென்னை புரசைவாக்கம் மில்லா் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் என்ஐஏ அலுவலகம் அதிகாரபூா்வமாக செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை என்ஐஏ அலுவலகம், தமிழகத்தில் நிகழும் தேச விரோத,தேச பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் அனுமதிக் கேட்டது .
இதையடுத்து தமிழக அரசு, சென்னை என்ஐஏ அலுவலக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவின் மூலம், தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு இனி கொச்சி,தில்லி என்ஐஏ அலுவலகங்கள் வழக்குப் பதியாது, சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகளே வழக்குப் பதிந்து, விசாரணை செய்வாா்கள்.