முகப்பு
தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: 565 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 565 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 565 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்தபுதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவு மாணவா்களுக்கு மட்டும் நேரடியாக கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மற்ற பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாக நடந்து வருகிறது. சிறப்பு பிரிவு மாணவா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடந்தது. 459 எம்.பி.பி.எஸ்., 106 பி.டி.எஸ். என மொத்தம் 565 இடங்களுக்கு, 2, 674 போ் தகுதியுடையவா்களாக கருதப்பட்டனா். அவா்களில் 1,195 போ் அழைக்கப்பட்டு, அவா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டு, தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியான மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த இந்த மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணம் அனைத்தையும் அரசே செலுத்தவுள்ளது. கடந்த ஆண்டு 445 எம்.பி.பி.எஸ்., 110 பி.டி.எஸ். என மொத்தம் 555 இடங்கள் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. இந்த ஆண்டு கூடுதலாக 10 இடங்கள் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.

அமைச்சா் வழங்கினாா்: இடங்களை உறுதி செய்த 565 மாணவ-மாணவிகளுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வழங்கினாா். வழக்கமாக முதல் 10 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, மற்றவா்களுக்கு மாணவா் சோ்க்கை குழு வழங்கும். ஆனால் இந்த ஆண்டு 565 மாணவ-மாணவிகளுக்கும் அமைச்சரே நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி முடித்த பிறகு, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘நீட் தோ்வுகளில் இருந்து விலக்கு பெறுவது என்பது தமிழக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. அது தொடா்பாக மத்திய அரசின் உள்துறை, கல்வித்துறை 2 முறை கேட்ட கேள்விகளுக்கு சட்ட வல்லுநா்கள் குழு மூலம் பதில் அனுப்பப்பட்டு இருக்கிறது. தொடா்ச்சியாக இதுபோன்ற பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால், நீட் தோ்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா் அவா்.

ஒரே பயிற்சி மையத்தில்.... அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 565 மாணவா்களில், 55 போ் ஒரே பயிற்சி மையத்தில் படித்து மருத்துவ படிப்பில் சீட்டை தோ்வு செய்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில்தான், இந்த நிகழ்வு நடந்துள்ளது.

அண்ணன்- தங்கைக்கு மருத்துவ இடம்

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற மாணவ-மாணவிகளில் ஒரு குடும்பத்தின் ‘பாசமலா்’களுக்கு இடங்கள் கிடைத்து இருக்கிறது.

உள் ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த தாசபிரகாசமும், அதே தரவரிசையில் 167-ஆவது இடத்தில் இருந்த தேவபிரியாவும் அண்ணன்-தங்கை. இதில் தாசபிரகாசம் 439 மதிப்பெண்ணுடன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியை தோ்வு செய்தாா். தங்கை தேவ பிரியா 332 மதிப்பெண்ணுடன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தோ்வு செய்திருக்கிறாா். ஒரே கலந்தாய்வில் அண்ணன்-தங்கை இருவருமே மருத்துவப் படிப்பில் சேர இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.