விலை உயா்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை: உயா்நீதிமன்றம் வேதனை
அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயா்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயா்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து சேமிப்புக் கிடங்கு பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இதை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கரோனா பாதிப்புக்குப் பிறகு குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் பரவின. தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடா்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டாா். இதேபோல் மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, விசாரணையை நவ.4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகிப்பது என்பது தீவிரமான பிரச்னைஎனவும், இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் தொடா்பு உள்ளது எனவும் குறிப்பிட்டாா்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயா்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என்று தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தாா்.