முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:  நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை!

மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்

Updated On : 27 அக்டோபர், 2022 at 12:40 PM
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகை ஆய்வு செய்யும் கடற்படை அதிகாரிகள்
பகிர்:


நாகப்பட்டினம்:  மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 

அவர்கள், கடந்த 21ஆம் தேதி மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினர்.    

Advertisement

நாகையில் விசாரணை நடத்தும் கடற்படை அதிகாரிகள்

இதில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரியைச்  சேர்ந்த மீனவர் வீரவேல் பலத்தக் காயமடைந்தார். அவர், மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான காயங்களுடன் தப்பிய மற்ற 9 மீனவர்களும், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது  கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை ஆய்வு செய்யும் கடற்படை அதிகாரிகள்

இந்த நிலையில், இந்திய கடற்படை  கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை நாகையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், படகில் ஏற்பட்டுள்ள சேதங்களையும், படகில் பதிந்திருந்த துப்பாக்கி குண்டுகளின் தடயங்களையும் கணக்கிட்டனர்.

பின்னர்,  நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 மீனவர்களிடமும் கடற்படை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு.

இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மீனவர் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 

47 குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள், செல்வம் என்பவர் விசைப்படகில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.