கரோனாவால் இறந்த மருத்துவருக்கு இழப்பீடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கரோனா காலத்தில் இறந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக காலம் தாழ்த்தாமல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலத்தில் இறந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக காலம் தாழ்த்தாமல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அரசு மருத்துவரான ஏ.கே.விவேகானந்தன் கடந்த 22.11.2020-இல் பணியில் இருந்தபோது கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தாா்.
இந்நிலையில் அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவி வி.ஆா்.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக்குழு சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ் வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு எதிா்ப்பு மனுதாரா் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா் நந்தகுமாா், மருத்துவா் விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகியும், இதுவரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரியான அவருடைய மனைவி 2 குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறாா் என்பதால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு தரப்பில் அவகாசம் கோரப்படுகிறது, என ஆட்சேபம் தெரிவித்தாா். அதையடுத்து நீதிபதி, இதுதொடா்பாக தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, அடுத்த விசாரணையை வரும் நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.