முகப்பு
தமிழ்நாடு

சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத் திட்டம் இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
கரைவெட்டி ஏரியை பார்வையிடும் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பகிர்:

அரியலூர்: சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத் திட்டம் இருக்க முடியாது என்றார் பாமக மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்தக் கோரி பாமக சார்பில் 2 நாள்கள் பிரசார எழுச்சி நடைப் பயணத்தை சனிக்கிழமை கீழப்பழுவூரில் தொடங்கிய அவர், கரைவெட்டி ஏரி, கண்டராதித்தம் உள்ளிட்ட ஏரிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

கி.பி. 9 நூற்றாண்டில் தொடங்கி 11 ஆம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய ஏரிகளுக்கும் ஆற்றிலிருந்தும், சிறிய ஏரிகளுக்கு பெரிய ஏரிகளில் இருந்தும் தண்ணீர் செல்வதற்கு நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. வீராணம் ஏரியை விட பெரிய ஏரியான சோழகங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து விட்டது. பெரும் கொள்ளளவு கொண்ட ஏரிகள் தூர்வாரப்படவில்லை.

அரியலூர் மாவட்டமே கொள்ளிடத்தின் கரையில் தான் அமைந்திருக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரை முறையாக பயன்படுத்தியிருந்தால் அரியலூர் மாவட்டம் வளம் கொழிக்கும் பூமியாக மாறியிருக்கும். சோழர்கள் காலத்தில் இம்மாவட்டம் அவ்வாறு செழிப்பான பூமியாகத் தான் இருந்தது. ஆனால், இப்போதோ, இம்மாவட்ட மக்கள் பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு செல்லும் அவலம் நிலவுகிறது.

முதல் நாள் நடைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கிய பாமக மாநிலத் தலைவர்அன்புமணி ராமதாஸ்.

மிகவும் வலிமையான பாசனக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு தூர் வாருதல், கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதன்  மூலம் அரியலூர் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.

சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும். மாவட்டத்தின் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும். அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். 

அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத்திட்டம் இருக்க முடியாது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து அவர், கண்டராதித்தம், திருமானூர், காமரசவள்ளி, குருவாடி, வைப்பூர் தூத்தூர், விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, சாத்தான்பாடி, கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான், கோட்டியால் ஆகிய ஊர்கள் வழியாகச் சென்று தா. பழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைப் பயணத்தை தொடர்ந்தார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது இரண்டாவது நாள் நடைப் பயணத்தை அரியலூரில் இருந்து தொடங்கி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் முடித்துக் கொள்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →