கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் தாமதம் எதுவும் இல்லை என இடதுசாரி தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்: கோவையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, காவல் துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்ஐஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மாநில அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறாா். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவா்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொருஅசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்ஐஏ-தான்.
ஒருவேளை காவல் துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்ஐஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவா்களுக்கு உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்: கோவை சம்பவம் தொடா்பான முதல் கட்ட விசாரணையைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் ஸ்டாலின் உயா்நிலைக் கூட்டம் நடத்தி, கோவை குற்ற சம்பவத்தின் விசாரணை எல்லைகளைக் கருத்தில் கொண்டு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைத்துள்ளாா். இதில் எங்கே தாமதம் ஏற்பட்டது? சாட்சியங்கள் மறைக்கப்படும், அழிக்கப்படும் வாய்ப்பு எங்கே ஏற்பட்டது? ஆளுநா் புகாருக்கு ஆதாரம் என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு: காா் வெடிப்பு சம்பவத்தின் ஆதாரங்களை அழித்ததற்கான ஆதாரங்கள் இருக்குமேயானால் அதன் மீது ஆளுநரே நடவடிக்கை எடுத்துவிடலாம். இதைப் பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டியதில்லை.