தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முதல்வா் இன்று கேரளம் பயணம்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (செப். 2) செல்கிறாா்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (செப். 2) செல்கிறாா்.
தென்மண்டல கவுன்சிலின் 30-ஆவது கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வா்கள் பங்கேற்கின்றனா்.
இதற்கான அழைப்பை ஏற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், திருவனந்தபுரம் செல்கிறாா்.
அங்கு கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்திக்கிறாா். சந்திப்பின் போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கேரள அரசின் சாா்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்வா், சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடா்பான கருத்துகளை எடுத்து வைக்கிறாா். அதன்பின், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.