திருச்சியில் பரபரப்பு... மதுபோதையில் ரகளை செய்த தந்தையை கொலை செய்த மகன்!
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன், இயற்கையாக இறந்ததுபோல இறுதிக் காரியங்களை மேற்கொண்ட நிலையில் தகவலறிந்த போலீசார் மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி: திருச்சியில் மதுபோதையில் நாள்தோாறும் ரகளையில் ஈடுபட்ட தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன், இயற்கையாக இறந்ததுபோல இறுதிக் காரியங்களை மேற்கொண்ட நிலையில் சற்றுமுன் தகவலறிந்த போலீசார் மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (52). தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் விஜயகுமார்(26).
மதுப்பழக்கத்துக்கு ஆளான முருகன் நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தாராம். எனவே, அனைவரும் முருகனை கீழ் தளத்தில் விட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவிலும் தொடர்ந்து ரகளை செய்துள்ளார். விஜயகுமார், கண்டித்தும் முருகன் அடங்கவில்லையாம்.
இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், முருகனை தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்துடன் வெளியே சென்றுள்ளார் முருகன், பின்னர் அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர். சனிக்கிழமை (செப்.3) அவரை தேடியபோது, வீட்டருகே உள்ள சந்தில் முருகன் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முருகன் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிக்க |
அவர் இயற்கையாக இறந்தது போலவே சொந்த பந்தங்களுக்கு தகவல் தெரிவித்து, சனிக்கிழமை பிற்பகலில் இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்துள்ளனர்.
இதற்கிடையில் முதல்நாள் நள்ளிரவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த தகராறு குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தில் வீட்டுக்குச் சென்று விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்ததை விஜயகுமார் ஒப்புக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முருகன் உடலை கைப்பற்றிய போலீசார் உடல் கூறாய்வுக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.