நீட் தேர்வில் கடந்த ஆண்டுகளை இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டு 99,610 மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதி 57,215 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற 336 மாணவ மாணவியர்கள் இளங்கலை மருத்துவ படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 2021-22 ஆம் ஆண்டு 1,08,318 மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதி 58,938 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற 445 மாணவ மாணவியர்கள் இளங்கலை மருத்துவ படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு 17.07.2022 அன்று நடைபெற்றது.
இதில் 1,32,167 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 17,517 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதியுள்ளார்கள். இதில் 67,787 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு மனநல ஆலோசனைகள் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 உதவி மையத்திலிருந்து 50 மனநல ஆலோசகர்கள் மற்றும் முதல்வரின் 1100 உதவி மையத்திலிருந்து 60 ஆலோசகர்களை கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவப்படிப்பு அல்லாத மற்ற துறை உயர்க்கல்வி படிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் இங்கு வழங்கப்பட்டது. ஜீலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 14-ம் தேதி வரை தொடர்புகொள்ளப்பட்டு, இதில் 564 மாணவர்கள் அதிக மனநல அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க- கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்
இம்மாணவர்களுக்கு 104 சேவை மையத்தில் பணிபுரியும் மனநல மருத்துவர்கள் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி இரண்டு நாட்கள் இடைவெளியில் கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்களில் 98 மாணவர்கள் மாவட்ட அளவில் மாவட்ட மனநல திட்ட மருத்துவக்குழுவால் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. தற்பொழுது நீட் தேர்வு முடிவுகள் 07.09.2022 அன்று வெளியிடப்படும் என்பதை முன்னரே அறிந்து 05.09.2022 தேதி முதல் அதிக மனநல அழுத்தத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவ மற்றும் மாவட்ட மனநலக் குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் குழு இணைந்து கண்காணிக்கப்படுகிறது. இக்குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் 104 அரசு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் 1100 என்ற “முதல்வரின் முகவரி” துறையின் அழைப்பு மையங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.