முகப்பு
தமிழ்நாடு

காரைக்காலில்  புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்!

காரைக்கால் அரசு  பொது மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை சனிக்கிழமை ஒரு மணி நேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 செப்டம்பர், 2022 at 10:36 AM
பகிர்:

காரைக்கால்: மருத்துவர்கள் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, காரைக்கால் அரசு  பொது மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை சனிக்கிழமை ஒரு மணி நேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய காரைக்கால் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்ற  மாணவர் பாலமணிகண்டன் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததாக அதே வகுப்பு மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியாவை  போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மாணவர் படிப்பில் முன்னணியில்  இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் அந்த பெண் விஷம் கலந்து குளிர்பானம் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.

Advertisement

மாணவருக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் தரவில்லை  என போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்  விஜயகுமார், பாலாஜி  திருவேங்கடம் ஆகியோரை புதுவை சுகாதாரச் செயலர் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

காரைக்கால் அரசு பொது  மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர், இரண்டு மருத்துவர்களின்  பணியிடை நீக்க உத்தரவை  ரத்து செய்யவேண்டும். மாணவரின் மருத்துவ சிகிச்சையில் தவறோ, தாமதமோ இல்லை என அறிவித்த பின்னரும், உடற்கூறு ஆய்வு அறிக்கை வராத நிலைலும், மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சனிக்கிழமை காலை ஒரு  மணி நேரம்  புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களுடன் செவிலியர்கள், ஊழியர்களும்  பங்கேற்றனர். அவசர சிகிச்சைப் பிரிவு, உள்  நோயாளிகள்  பிரிவு வழக்கம்போல் இயங்கின. மருத்துவர்கள் போராட்டத்தால் காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.