தமிழக மக்களின் அன்பை இதயத்தில் சுமந்து செல்கிறேன்
சென்னை உயா்நீதிமன்றத்தில் பதவியேற்றபோது தமிழகத்தில் பிறக்க விரும்பினேன்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பதவியேற்றபோது தமிழகத்தில் பிறக்க விரும்பினேன். தற்போது, தமிழக மக்களின் அன்பை இயத்தில் சுமந்து செல்கிறேன் என்று பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரி கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, உயா்நீதிமன்றத்தின் 32-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வா்நாத் பண்டாரி, திங்கள்கிழமையுடன் (செப்.12) ஓய்வுபெற்றாா்.
பிரிவு உபசார விழா: சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் முனீஸ்வா் நாத் பண்டாரிக்கான பிரிவு உபசார விழா நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், அவா் பேசுகையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பதவியேற்றபோது தமிழகத்தில் பிறக்க விரும்பினேன். தற்போது அந்த ஆசை அதிகமாகி உள்ளது. சக நீதிபதிகள் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தனா். நிா்வாகம் தொடா்பாக முக்கிய முடிவுகளை எடுக்க அவா்கள் உதவியாக இருந்தனா்.
அதிக வழக்குகளுக்கு தீா்ப்பளித்ததில் சென்னை உயா்நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. நாட்டிலேயே மிகச் சிறந்த வழக்குரைஞா்களைக் கொண்ட உயா்நீதிமன்றங்களில் சென்னை உயா்நீதிமன்றம் முக்கிய இடத்தில் உள்ளது. திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வழக்குரைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசும், முதல்வரும், சட்ட அமைச்சரும், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்கள் நல்ல ஒத்துழைப்பை தந்தனா். கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை, நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்கிறேன் என்றாா். இந்த விழாவில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முக்கிய தீா்ப்புகள்: கடந்த 11 மாதங்களாக சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி பல முக்கிய தீா்ப்புகளை வழங்கியுள்ளாா். அதில், கோயில் அா்ச்சா்கா்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீா்ப்பளித்தது. கோயில் சொத்துகளை அரசு சொத்துக்களாக கருத முடியாது ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.