புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து நான்கு நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பழமையான கட்டடம் பழுது காரணமாக, அங்குப் படித்து வரும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள், புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் உள்ள கே.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு கே என் சி பள்ளி மாணவிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கேன்சி மகளிர் பள்ளிக்குச் சென்றனர். அப்போது, அங்குள்ள மாணவிகளுக்கும், இந்தப் பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்து வந்த இரு மாணவிகளின் பெற்றோர் சிலர், பள்ளியின் உள்ளே புகுந்து மாணவிகளைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி உள்ளிட்டோர் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்திப் பெற்றோர்களைச் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர்.
தகவல் அறிந்து வந்த அமைச்சர் க.லட்சுமி நாராயணன் விரைந்து வந்து பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தினார். கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரித்த அவர், பள்ளிக் கட்டடம் இல்லாததால் தற்காலிகமாக வெளியில் இருந்து பள்ளி மாணவிகள் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவையின்றி ஆசிரியர்கள், மாணவிகள் பிரச்னை செய்யக்கூடாது என எச்சரித்தார்.
தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் இரண்டு பள்ளிகளுக்கும் நான்கு நாள்கள் விடுமுறை அளித்து முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவிகள் வெளியே அனுப்பப்பட்டனர். இதனை அடுத்து சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்து, அவர்களை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டது. இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.