முகப்பு
தமிழ்நாடு

இப்படி செய்தால் எப்படி? அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்

மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு சிகிச்சையளித்ததில் நடந்த கவனக்குறைவுக்கு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு, அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைவர் மெமோ கொடுத்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
பகிர்:

புதுக்கோட்டை: மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு சிகிச்சையளித்ததில் நடந்த கவனக்குறைவுக்கு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு, அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைவர் மெமோ கொடுத்துள்ளார்.

வேல்லோர் கோயில் அருகே கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் சிக்கிய 53 வயதாகும் மதிவண்ணன், தனது வலது காலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் ஊழியர்கள் காயத்தைத் துடைத்து தையல் போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். காயம் அடைந்த போது ஏற்பட்ட வலியை விட, சிகிச்சைக்குப் பிறகு அதிக வலி ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது காலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நோயாளிக்கு மட்டுமல்ல எக்ஸ்ரே எடுத்தவருக்குக் கூட தலைசுற்றியிருக்கும்.

அதாவது, அவரது காலில் காயம் ஏற்பட்டபோது, தசைப் பகுதிகளுக்குள் சென்ற சிறு சிறு கற்களைக் கூட அகற்றாமல், அதனை உள்ளே வைத்து தையல் போட்டிருப்பதும், எக்ஸ்ரேவில் அந்த கற்கள் காலின் எலும்பை ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதும் தெயிர வந்தது.

உரிய நேரத்தில் அந்தக் கற்களை அகற்றாவிட்டால் அது காலையே பாதித்துவிடும் என்று கூறியதை அடுத்து, உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் அனைத்துக் கற்களும் அகற்றப்பட்டுள்ளன. இது அந்த ஊர் முழுக்கச் செய்தியாகி, தற்போது ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இன்னமும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மதிவண்ணன், தனக்கு அரசு மருத்துவமனை இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அறந்தாங்கி மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லை என்றும், பெரும்பாலான ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருவதையும் மக்கள் எடுத்துரைக்கிறார்கள்.

இது குறித்து மருத்துவமனை தலைவர் சேகர் கூறுகையில், இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

இது குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது பணியிலிருந்த ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →