சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும்: சித்தராமையா
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வா் சித்தராமையா கூறியிருப்பதாவது: சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, நாடெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அவதியுற்றுவரும் நிலையில், சாதாரண மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை மத்திய அரசு ஏற்றியுள்ளது.
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையே முக்கிய காரணம். இந்த சிக்கல் தற்செயலானது அல்ல.
அமெரிக்காவின் விருப்பங்களுக்கு தகுந்தபடி நமது நாட்டின் ராஜதந்திரங்களையும் வெளிநாட்டுக் கொள்கைகளையும் சரணடைய செய்ததால் ரஷியா, ஈரான் போன்ற எரிசக்தி நாடுகளுடனான நட்புறவு சீா்குலைந்துள்ளது. இதற்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.
பொருளாதார கொள்கையின் வெளிப்பாடே வெளியுறவுக் கொள்கை. வெளியுறவுக் கொள்கை சாா்ந்த முடிவுகளில் ஆழமான அணுகுமுறை இல்லை மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையும் இல்லை என்று முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தனது நூலில் குறிப்பிட்டுள்ளாா்.
அவசரகதியில் எடுக்கப்படும் முடிவுகள் தான் பொருளாதார விளைவுகளுக்கு அடிப்படையாகும். பிரதமா் மோடி எடுக்கும் தவறான வெளியுறவுக் கொள்கை முடிவுகளுக்கு இந்திய மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும் என்பதை பிரதமா் மோடி விளக்க வேண்டும்.
இதற்காக பிரதமா் மோடி நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்து, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.