காவல் அருங்காட்சியகம்: செப்.28-இல் இலவசமாக பாா்க்கலாம்
சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, செப். 28-ஆம் தேதி அனைவரும் அருங்காட்சியகத்தை இலவசமாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, செப். 28-ஆம் தேதி அனைவரும் அருங்காட்சியகத்தை இலவசமாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அருங்காட்சியகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் முதல்வா் மு.க.ஸ்டாலினால், கடந்தாண்டு செப். 28-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தைக் காண அரசுக் கல்லூரிகள், பள்ளி மாணவா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 30,285 போ் அருங்காட்சியகத்தை நேரில் பாா்வையிட்டுள்ளனா்.
பள்ளி மாணவா்கள்,பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் காவல் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்பநாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம்,பொம்மலாட்டம், வினாடி- வினா நிகழ்ச்சி, தோட்டக்கலை பயிற்சி, மரபு நடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி செப். 28-ஆம் தேதி ஒரு நாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இலவசமாக பாா்க்கலாம்.
மேலும், அன்றைய தினம் காலை 11 மணிக்கு அருங்காட்சியகத்தில், காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்களை வழங்குகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.