மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 நாட்களுக்கு பின் குறையத் தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர்கர் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஜூலை 16-ம்தேதி நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
கடந்த 70 நாட்களாக தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வந்தது.
கடந்த சில தினங்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து போனது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வந்தது. இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,456 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 70 நாட்களுக்குப் பிறகு 120அடியிலிருந்து 119.95அடியாக குறைந்தது.
அணையின் நீர் இருப்பு 93.39 டி.எம்.சியாக இருந்தது. நடப்பு நீர் பாசன ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை மேட்டூர் அணைக்கு 461 டி.எம்.சி தண்ணீர் மழையின் காரணமாக வந்துள்ளது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மட்டும் 123 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.