மெரினா கடற்கரையில் நிரந்தர சாய்வுதளம் அமைக்கப்படும்
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, நிரந்தர சாய்வுதளம் அமைக்கப்படும் என்று சென்னை பெருமாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, நிரந்தர சாய்வுதளம் அமைக்கப்படும் என்று சென்னை பெருமாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாய்வுதளம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை மீட்புக் குழுவினருடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், மெரினா கடற்கரையில், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக சாய்வுதளத்தை மாற்றிவிட்டு, நிரந்தரமாக சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் மரப்பலகைகள் கொண்டு 200 மீட்டர் தொலைவுள்ள சாய்வுதளப் பாதையை வடிவமைத்தனர். மற்றும், சென்னை மாநகராட்சி சார்பில் ஜியோ-சிந்தெடிக் பொருள்களைக் கொண்டு மாதிரி பாதை ஒன்றம் வடிவமைக்கப்பட்டது.
Advertisement
ஆனால், சென்னை மாநகராட்சி அமைத்த இந்த சாய்வுதளப் பாதை, மழைக்காலங்களில் மோசமடைந்து, சக்கரநாற்காலிகள் எளிதாக சுழலமுடியாமல் செய்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனவே, சக்கர நாற்காலிகளில் செல்வோர், இப்பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஜியோ - சிந்தெடிக் பொருளைக் கொண்டு தற்காலிக சாய்வுதளம் அமைக்கப்பட்டது. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மீட்புக் குழுவினருடன் நடத்திய ஆலோசனையில், மரத்தாலான சாய்வுதள பாதையில், சக்கரநாற்காலிகள் மிக எளிதாக செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஜியோ-சிந்தெடிக்கில் அமைக்கப்பட்ட பாதைக்கான செலவு ரூ.30 லட்சம். ஆனால் மரத்தாலான பாதை அமைக்க ரூ.2.5 கோடி செலவாகும். இதில், பாதி செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தனர்.
அதேவேளையில், சாய்வுதள பாதை அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.