காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
பாஜகவின் தேர்தல் பிரசாரத்திலும் விமர்சிக்கப்படும் நேரு...
அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அம்மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி செய்த பாவப் பட்டியலை வெளியிட்டார்.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப். 5) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது :
Advertisement
“1947-இல், இந்தியப் பிரிவினையின்போது, பாகிஸ்தானிடம் அஸ்ஸாமை ஒப்படைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து செயல்பட்டது. ஆனால், அஸ்ஸாமின் முதல் முதல்வரான கோபிநாத் பார்டோலாய் அஸ்ஸாமானது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்க கடுமையாகப் போராடி அதனை உறுதிசெய்தார்.
1962-இல், இந்திய-சீன போரின்போது, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அஸ்ஸாமை விதி வசம் ஒப்படைத்தவர்.
ஊடுவல்காரர்கள் அஸ்ஸாமில் தங்கி வசித்திடவும் அவர்களுக்கான பாதுகாப்பையும் அனுமதித்தனர்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினர்.
ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்ததுடன், நாட்டில் வழித்தோன்றல் ஆட்சியை ஊக்குவித்தனர்” என்று குறிப்பிட்டார்.