மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
மேற்குவங்கத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் பேச்சு...
கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்குவங்கம் வந்த நிலையில், வடக்கு 24 பர்கானா மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
"மமதா இங்கு மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். வங்காள மக்களின் நலனுக்காக அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் மக்களுக்கு இழைத்தது கொடுமைகளை மட்டுமே. இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், வங்கத்தை வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னுக்குத் தள்ளிவிட்டார். மூன்று முறை ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தை படுமோசமாக்கியுள்ளது" என்று பேசினார்.
கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்ததற்கு, பிரதமர் மோடி மௌனமாக இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜ்நாத் சிங் பேசுகையில்,
"நான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர். எனவே, பாதுகாப்புத் துறை தொடர்பாக நான் பேசுவது என்னுடைய கடமை. ஆனால் இதுபற்றி அனைவரும் பேச வேண்டும் என்று அவசியமில்லை.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டபோது, அவர்கள் அதன் விளைவுகளைச் சந்தித்தார்கள். இப்போது அவர்கள் வங்காளத்தைக் குறிவைத்தால் இம்முறை பாகிஸ்தான் பல கூறுகளாகப் பிளவுபடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்" என்று கூறினார்.