முகப்பு
தமிழ்நாடு

சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 1 செப்டம்பர், 2022 at 8:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:42 PM

தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது வியாழக்கிழமை (செப்.1) முதல் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, கார், வேன், ஜீப்புகளுக்கு ஐந்து ரூபாயும், டிரக், பேருந்து மற்றும் பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 15 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.5 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, போக்குவரத்து சேவை கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என்ற வரிசையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தன் பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சுங்கக் கட்டண உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும், வாகன உரிமையாளர்களையும், பாதிக்கும் செயலாகும். இந்தக் கட்டண உயர்வையடுத்து, வாகன உரிமையாளர்கள் வாகனத்திற்கான கட்டணங்களை உயர்த்தும் சூழ்நிலை உருவாகி, அதன்மூலம் அத்தியாவசிப் பொருட்களின் விலை மேலும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், விதிகளுக்கு ஏற்ப சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.