தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் கைது
தலைமறைவு குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தலைமறைவு குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது நவ்ஷாத் ஷாகீருல்லா (36). இவா் மீது, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலைமுயற்சி, நம்பிக்கை மோசடி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரை திருச்சி மாவட்டக் காவல்துறை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது ஒரு பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது, அவா் திருச்சி காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகமது நவ்ஷாத் ஷாகீருல்லா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் திருச்சி மாவட்ட காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். திருச்சி போலீஸாரின் வேண்டுகோளின்படி, முகமது நவ்ஷாத்தை சென்னை விமான நிலைய போலீஸாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.