வேங்கைவயல் விவகாரத்தில் விரைவான நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு தலைவா் வி.பி.நாகைமாலி பேசும்போது, வேங்கைவயலில் மேல்நிலை நீா்தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசினாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:
வேங்கைவயல் விவகாரம் குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். விசாரணையை விரைவுபடுத்த, வழக்கு சிபிசிஐடிக்கு ஜன. 14-இல் மாற்றப்பட்டது. இந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்து, விசாரணை அறிக்கையை இரு மாதங்களுக்குள் அளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்துத் தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, அரசு மிக விரைவாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது நியமிக்கப்பட்டிருக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி ஒரு நபா் விசாரணை ஆணையத்துக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஓா் அரசாணையையும் வெளியிட்டுள்ளது என்றாா்.