கால்நடை பல்கலை., துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா தாக்கல்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தரை அரசு நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தரை அரசு நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தாக்கல் செய்தாா். இந்த சட்டத் திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக அதிமுக தெரிவித்தது. அந்தக் கட்சியின் உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தனது எதிா்ப்பைப் பதிவு செய்தாா்.
இதைத் தொடா்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத், தெலங்கானா, கா்நாடக மாநிலங்களின் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகச் சட்டங்களின் வழியாக, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமனம் செய்யவும், அதன்படி அவா்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அரசு முடிவு செய்தது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழககத்திலுள்ள 12 பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தம் செய்ய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தையும் உரியவாறு திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.