அனைத்து வழக்கு பதிவுகளும் எண்மமயம்: மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘சச்சரவுகளுக்கு தீா்வு காணும் நடைமுறைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வரும் சூழலில், குற்ற வழக்குகள் மற்றும் பொது வழக்குகளின் அனைத்துப் பதிவுகளும் எண்மமயமாக்கப்பட வேண்டும்’
‘சச்சரவுகளுக்கு தீா்வு காணும் நடைமுறைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வரும் சூழலில், குற்ற வழக்குகள் மற்றும் பொது வழக்குகளின் அனைத்துப் பதிவுகளும் எண்மமயமாக்கப்பட வேண்டும்’ என்று மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இதற்காக உச்ச நீதிமன்றத்தின் மின்னணு குழு (‘இ’ கமிட்டி) கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி எண்ம ஆவண பாதுகாத்தலுக்கான வழிகாட்டி நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது’ என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினா்.
ஊழல் வழக்கில் அலாகாபாத் உயா் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிா்த்து குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
28 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தக் குற்றத்தை விசாரித்த விசாரணை நீதிமன்றத்தின் பதிவுகள் இல்லாமல் போனது. நீதிமன்றங்கள் முயற்சித்தபோதிலும் அந்தப் பதிவுகளை மீட்க முடியவில்லை.
இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமா்வு, ‘விசாரணை நீதிமன்றத்தின் பதிவுகள் இல்லாத நிலையில், உயா் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததோடு, அபராதத் தொகையையும் உயா்த்தியது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. நியாயமான சட்ட நடைமுறை என்பது, விசாரணை நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவை கேள்விக்குட்படுத்துவதற்கான வாய்ப்பை மேல்முறையீடு செய்யும் நபருக்கு அளிப்பதையும் உள்ளடக்கியதாகும். விசாரணை பதிவுகள் கிடைக்கும்போது மட்டுமே மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இதைச் செய்ய முடியும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரை தண்டனையிலிருந்து விடுத்து உத்தரவிட்டனா்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் சச்சரவுகளுக்கு தீா்வு காணும் நடைமுறைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அனைத்து குற்ற மற்றும் பொது வழக்குகளின் பதிவுகளை முறையாக எண்மமயமாக்குவதை உயா் நீதிமன்றங்களின் பதிவாளா்கள் உறுதி செய்யவேண்டும்.
சட்ட நடைமுறைகளின்படி, ஒரு வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வழங்கப்பட்டுள்ள கால வரம்புக்குள், இந்த வழக்குப் பதிவுகள் எண்மமயமாக்கலை மாவட்ட நீதிமன்றங்கள் செய்து முடிக்க வேண்டும்.
அவ்வாறு பதிவுகள் எண்மமயமாக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அதனை விரைந்து சரிபாா்த்து, எண்மமய பதிவு தயாா்நிலையில் இருப்பதற்கான சான்றையும் அளிக்கவேண்டும்.
மேலும், எண்மமயமாக்கப்பட்ட பதிவுகள் தொடா்பான பதிவேடு பராமரிக்கப்பட்டு, உரிய வழிகாட்டுதல்களுக்காக சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்களுக்கு அவ்வப்போது அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.