வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவ வழக்கில் சிபி சிஐடி போலீஸாா் கடந்த வாரத்தில் 11 பேரை மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்து, நீதிமன்ற அனுமதி பெற்றதில், 8 பேர் மரபணு சோதனைக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், 3 போ் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, அதற்கான நீதிமன்ற அனுமதி அளிக்குமாறு புதுக்கோட்டைவன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை பரிசீலனை செய்த நீதிபதி சத்யா, புதிதாக மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை செய்ய அனுமதி அளித்தனர். இதையடுத்து ஓரிரு நாள்களில் அவா்களிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்படவுள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்துள்ளனர்.