தொடா்ந்து உச்சத்திலிருந்து விற்பனையாகி வந்த தக்காளி, கோயம்பேடு சந்தையில் சனிக்கிழமை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக படிப்படியாக உயர்ந்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.210 வரை தக்காளி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து புதன்கிழமை சற்று அதிகரித்ததையடுத்து கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் வெளிச் சந்தை, சில்லறை விற்பனை கடைகளில் ஒருசில இடங்களில் மட்டுமே விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
மற்ற பகுதிகளில் வழக்கம் போல கிலோ ரூ.190 முதல் ரூ.210 வரை விற்பனையானது. வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை படிப்படியாகக் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மொத்த விற்பனையில் ஒருகிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, சனிக்கிழமை ரூ.20 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல அதிக விலைக்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பீன்ஸ், வண்ணக்குடமிளகாய் உள்ளிட்ட பொருள்களின் விலையும் சற்று குறைந்துள்ளது.
காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள், உணவக உரிமையளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.