திருவாடானை: திருவாடனையில் மணிமுத்து ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாடனையில் மணிமுத்தாற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 4ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தாரர்களின் உபய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க: 5 ஆண்டுகளுக்கு பின் திருவீதி உலா வந்த குறிச்சி கூத்தாண்டவர்!
முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பாக பால்குடம், மயில் காவடி, வேல் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்து அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீயில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையும் படிக்க: ஆடி கடைசி வெள்ளி: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு; 2,500 பக்தர்கள் பங்கேற்பு
இதில் உள்ளூர் சுற்றுவட்டார கிராம மக்கள் வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.