திருநெல்வேலி: நான்குநேரியில் சாதிய வன்மத்தால் சக மாணவர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரையிடம் விடியோ கால் மூலம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் சின்னத்துரை (17). இவர், வள்ளியூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமையாசிரியரிடம் சின்னதுரை புகார் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கடந்தபுதன்கிழமை இரவு வீட்டில் இருந்த சின்ன துரையை மாணவர்கள் சிலர் வெளியே இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்க வந்த அவரது சகோதரி சந்திரசெல்விக்கும் (14) வெட்டு விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த 2 பேரும் திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க | கோவை வந்தார் ராகுல் காந்தி!
இந்த சம்பவம் தொடர்பாக நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி நான்குனேரி, தென்னி மலை, நெடுங்குளத்தைச் சேர்ந்த 7 சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னதுரை, அவரது சகோதரி ஆகியோரை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். திமுக சார்பில் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரையிடம் விடியோ கால் மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தாயாருக்கும் ஆறுதல் கூறினார்.
குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு துணை நிற்கும் எனவும் முதல்வர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தபட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.