கும்பகோணத்தில் தனியாா் துணிக்கடையில் தீ விபத்து
கும்பகோணத்திலுள்ள பிரபல துணிக்கடையின் முகப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவியது.
கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள பிரபல துணிக்கடையின் முகப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் தனியாா் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கடையில் ஆடி சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்ததாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தை விட வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில், இரவு 7 மணியளவில் அந்த கடையின், பிளக்ஸ், பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முகப்புப் பகுதியில் திடீரென புகை உருவாகி எழுந்தது. பின்னர், தீ மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது.
இதனை பார்த்த பொதுமக்கள், கடை ஊழியரிடம் தெரிவித்தனர். உடனே உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். மேலும், ஊழியர்கள், பொதுமக்கள் கடையின் பின்பக்கம் வழியாக பாதுகாப்பாக வெறியேற்றப்பட்டனர். சற்றுநேரத்தில் முகப்புப் பகுதி முழுவதும் தீ பற்றி சுமாா் 50 அடி உயரத்துக்கு மளமளவென எரிந்தது.
இதனால், கடையில் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழகம், தனியார் மருத்துவமனை, வணிக வளாகங்கள் குடியிருப்புகளில் இருந்தவர்களும் முன்னெச்சரிக்கையாக அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம், திருவிடைமருதுார் தீயணைப்பு துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வானங்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 50 அடி உயரத்திற்கு மளமளவென பரவியதால், சுமார் மூன்று கிலோ மீட்டர் துாரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், அந்த பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது என தெரிவித்தனர்.