மதுரை: மதுரை புது சிறைச் சாலையில் கட்டப்பட்ட கைதிகளே நடத்தும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் மதுரை மத்திய சிறைச் சாலையின் புது சிறைச் சாலை அருகே உள்ள 35 சென்ட் இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக 36 சிறை கைதிகளால் 24 மணி நேரமும் செயல்படும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது.
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள கைதிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.300 சம்பளம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்துறையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ள ஆறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுவும் ஒன்று.
சென்னையில் பெண் கைதிகள் மூலம் பெட்ரோல் விற்பனை நிலையம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.