உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்து கொண்டு உத்தரப் பிரதேசத்திற்குச் சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்த், அவர் காலில் விழுந்து வணங்கினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், தனது 12 நாள்கள் ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு (ஆக. 21) சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்குச் சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார்.
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன். இதில் வேறு எந்த உள்நோக்கமுமில்லை. இமயமலை பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.