தேரோடும் வீதியில் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி!
திருவாரூர் சந்நிதி தெருவில் தங்கி இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேரோடும் வீதிகளை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாணவிகள் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவாரூர்: திருவாரூர் சந்நிதி தெருவில் தங்கி இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேரோடும் வீதிகளை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாணவிகள் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவாரூரில் இன்று நடைபெறவிருக்கும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் சனிக்கிழமை பிற்பகலில் திருவாரூருக்கு வருகை தந்தார். மாவட்ட எல்லையான கானூரில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்த முதல்வர் அங்கு ஓய்வு எடுத்த பின்பு மாலை காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்பு அங்கு வாயிலில் காத்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அங்கிருந்து நடந்து சென்று காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் உறவினர் வீட்டுக்கு வந்தவர் இரவு அங்கு தங்கினார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் நடைப் பயிற்சி மேற் கொள்வதற்காக தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவர் வடக்கு வீதி வழியாக சென்று தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தை சுற்றி தெற்கு மட வளாகம் வழியாக மீண்டும் உறவினர் இல்லத்திற்கு வந்தார்.
முதல்வர் நடை பயிற்சி மேற்கொண்ட போது வழிநெடுகிலும் பொது மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மாணவிகள் சிலர் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். பள்ளிச் சிறுமிகள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ந்தனர்.