தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்
தனியார் நிறுவனங்கள், அலுவலங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், அலுவலங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிக்ஜம் புயல் இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 80 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 380 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கன மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Advertisement
அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (05.12.2023) ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.