சென்னை: தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று திரும்பிய கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.
கூட்டம் நடக்கும் அரங்கத்துக்குள் சக்கர நாற்காலியில் விஜயகாந்த் அழைத்து வரப்பட்டபோது, அவரது தொண்டர்கள் கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூட்டம் தொடங்கியதும், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவெடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற பின் பிரேமலதா, பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டு உரையாற்றினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்தனர்.