பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி 33,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று புதிய முனையத்தை தொடங்கி வைக்க பிரதமா் நரேந்திரமோடி திருச்சி வருகிறாா். மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38- ஆவது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமா் பங்கேற்கிறாா்.
இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். திருச்சிக்கு பிரதமா் வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) முதல் குழு வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமா் வருகையின்போது 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி 33,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.