முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் முதியோர் உதவித்தொகை: அமைச்சர் மா.சுப்ரமணியன் 

அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

Updated On : 4 பிப்ரவரி, 2023 at 1:38 PM
மீண்டும் முதியோர் உதவித்தொகை: அமைச்சர் மா.சுப்ரமணியன் 
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:55 AM

ஈரோடு: அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஈரோடு  கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கின்றனர். இந்த ஆட்சியின் திட்டங்களும் முதல்வரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisement

ஏறத்தாழ 400 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.           ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்குச் சென்றாலும் மழை நீர் வடிகால் பணி, புதை சாக்கடை விரிவாக்கப் பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன. புதை சாக்கடையும் புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்தச் சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல்வர்  400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்தனர். அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

கருங்கல்பாளையம் பகுதியில் பழமையான கிணறால் பல்வேறு பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது. எனினும் தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் முத்துசாமி உடன் கலந்து ஆலோசித்து  இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் முடிவின்படி கிணறை சீரமைப்பதா அல்லது கிணறை நிரந்தரமாக மூடுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.