எழுதாத பேனாவிற்கு எதுக்கு நினைவுச் சின்னம்? பிரேமலதா விஜயகாந்த்
தலைவர் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
தலைவர் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் இன்று கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர், ஆனந்த் நன்கு அறிமுகமானவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்த்தைப் பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள் - அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது - ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது - அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார்.
மக்களது வரிப்பணத்தைக் கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லை. தேமுதிக கொள்கையுடன் ஒத்துப் போகும் கட்சிகள் தமிழகத்தில் பல உள்ளது.
ஆகையால் தான் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டதாக தெரிவித்தார். வரும் தேர்தல்களில் கூட்டணி குறித்து விஜயகாந்த் உரிய நேரத்தில் அதனை அறிவிப்பார் என்றார். விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இதுகுறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.