விவசாய சங்கம், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
விவசாய சங்கங்கள், தொழில் நிறுவன சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.
விவசாய சங்கங்கள், தொழில் நிறுவன சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று (15.2.2023) சேலத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள் சங்கம், ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சங்கம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம், மலையகப் பகுதி பழங்குடி மக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைத்திட ஏதுவாக இடஒதுக்கீடு மற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.