சென்னை: தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தில்லி புறப்பட்டு சென்றார்.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி நேரடியாக கோரிக்கை வைக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.