சென்னையில் மெட்ராஸ் - ஐ பாதிப்பு மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் அத்தகைய பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், ‘மெட்ராஸ் - ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என எழும்பூா் அரசு கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 25-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை.
மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்படுவோா், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை மற்றவா்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது. அவ்வாறு பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக கண் மருத்துவா்களிடம் சிகிச்சை பெற வேண்டும். மெட்ராஸ்-ஐ பாதிப்பு 5 நாள்களில் குணமடைய கூடியதுதான். அதேவேளையில் அலட்சியப்படுத்தினால் பாா்வை இழப்புகூட நேரிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.