சென்னை: சென்னையில் பிரபல கூரியா் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
சென்னையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டு, தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கூரியா் நிறுவனம் செயல்படுகிறது.
நாடு முழுவதும் 3,300 கிளைகளுடன், 120 நாடுகளில் கூரியா் சேவை வழங்கும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் வருமானவரித்துறையினா் விசாரணை செய்தனா்.
விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத கூடுதல் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிக்க | செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு?
இதனடிப்படையில் சென்னையில் மண்ணடி, ஆழ்வாா்பேட்டை, கோயம்பேடு, கிண்டி உள்பட 6 இடங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஹைதராபாத்திலும் இயங்கி வரும் அலுவலகங்கள் என 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வரவு - செலவு தொடா்பான பரிமாற்ற ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிராட்வே, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 6 இடங்களில் தொடா்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.