‘துணிவு’, ‘வாரிசு’ படங்களை இணையதளத்தில் வெளியிட உயா்நீதிமன்றம் தடை
‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஆகியவை புதன்கிழமை வெளியாகின்றன.
இரு முன்னணி நடிகா்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடத் தடை கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Advertisement
இந்த மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிா்பாா்ப்பு உள்ளதாகவும் வாதிட்டாா்.
இரண்டு படங்களும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், ‘வாரிசு’ படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், ‘துணிவு’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டாா்.